அரியதொரு பொக்கிசத்தை அந்த நாள் தந்தது
அது உனது ஆழுமையின் வெளி….
பெயருக்கு ஏற்றாற்போல்
உனது எண்ணங்களும் பிரகாசமாக
மேதைகளை வென்ற தமிழின் வனப்பு உனது திறனாய்….
பேச்சுக்களும் எழுத்துக்களுமே எழுச்சியாக
வெற்றுப் பேச்சாளர்களால் நிறைந்த மேடையின்
நிறத்தையும் குணத்தையும் மாற்றியவன் நீ…..
பழமைவாதிகளாலும் பொறாமையாளர்களாலம்
குற்றப்பட்ட உனது திறனை
சிரித்தபடி சமாளித்துச் சிகரங்கள் தொட்டவன் நீ….
சமாதான காலக்கதவுகள் திறக்க
ஊர்காணப்போவதாய் விடைபெற்று
போராளியாய் ஆனவன்….
போர்முகம் சூடிப் போராடிய வன்னிக்குள்
ஊர்முகம் காக்க உழைத்தவருள் நீயுமாய்
காயாத ஈரமாய் உன் கடிதங்கள் பத்திரமாய்….
வாழ்கிறாயா இல்லை வன்னிமண்ணணைகளில் புதைந்தாயா…?
எவ்வித தகவலும் வராத காலமொன்றில்
மீண்டாய் மீண்டும் புலம்…..
நீயாய் சேர்த்த நட்புகளையெல்லாம்
நீயாக விடுவித்துக் கொண்டு ஊமையாய் ஆனாய்
உனது மௌனங்களின் மொழி எமக்கு இன்றுவரை புதிராய்…..
நீ வாழ்ந்தால் போதுமென்று வாய்மூடியிருக்கிறோம்
காரணம் சொல்லாத உனது மௌனம்
புரிந்து கொள்ள எக்கருவியும் எம்மிடமில்லை நண்பா….!
யாரோவாகவே இருந்துவிடாமல் ஏன்
எங்களுக்குள் நட்பாய் இறங்கி
நாட்டுப்பற்றாளனாய் உறவானாய்…..?
‘தற்கொலைகள் முன்னாள் போராளிகள் மனநலபாதிப்புகள்’
செய்திகள் வந்தால் நீதான் ஞாபகம் நிறைகிறாய்
மயான வாசலில் உன் பற்றிய பயங்கNளூடு துடிக்கிறதெம் ஆன்மா…..
அழிவுகளின் வேர் நாங்களென்றா – இல்லை
அழிவு நிலம் நோக்கியுன்னை அனுப்பியோர்
நாங்களேயென்ற கோபமா….?
காரணத்தையேனும் சொல்லிவிட்டு மௌனம் கொள்
கடைசிவரை வன்னியில் கரைந்த உனது நாட்கள் பற்றி
எதையுமே கேட்கமாட்டோம்…..
புழையபடி புன்னகையும் பழைய நினைவுகளையும் பேசுவோம் வா
நீண்ட மணித்துளிகள் விவாதிப்போம் கோபிப்போம்
மீண்டும் புதிதாய் உறவைப் புதுப்பிப்போம்…..
10.05.2012(புலமிருந்து நிலம் போய் போராளியாகி தாயகக்கனவோடு கடைசிவரை வன்னி மண்ணில் வாழ்ந்து புலம் மீண்டு தானாய் தேடிய நட்பெல்லாம் வெறுத்துத் தனிமையை நேசித்து தனிமையாய் போன தோழனுக்காய் இக்கவி.)
